விருத்தாசலம், மார்ச் 18: விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 51 ஊராட்சிகளில் தூய்மை பாரத இயக்கம் மூலம் திடக்கழிவு மேலாண்மை திட்டம் இயங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு செல்வதற்காக ஒவ்வொரு ஊராட்சிகளுக்கும் பேட்டரி வாகனம் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக நேற்று விசலூர், சாத்துக்குடல் கீழ்பாதி, சின்னக்கண்டியாங்குப்பம், நறுமணம், கோவிலானூர் ஆகிய ஐந்து ஊராட்சிகளுக்கு பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் மற்றும் 51 ஊராட்சிகளுக்கும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தூய்மை பணியாளர்கள் பிரித்து களப்பணியில் ஈடுபடும் வகையில் 66 தள்ளுவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஒன்றிய சேர்மன் மலர் முருகன் தலைமை தாங்கி திட்டத்திற்கான வாகனங்களை வழங்கினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தண்டபாணி, ரேவதி, நிர்வாக மேலாளர்கள் சிவா, சங்கர் முன்னிலை வகித்தனர். அந்தந்த ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட வாகனங்களை அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பெற்றுக் கொண்டனர். ஊராட்சி மன்ற தலைவர்கள் விசலூர் ஜெயச்சந்திரன், சாத்துக்குடல் கீழ்பாதி சக்திவேல், கோவிலானூர் வனிதா ஆரோக்கியம், சின்னகண்டியாங்குப்பம் விமலா கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.