தூத்துக்குடி, மார்ச் 15: தூத்துக்குடியில் இரட்டை ரயில் பாதை பணிகள், இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஏப்ரல் முதல் வாரத்தில் புதிய வழிப்பாதையில் ரயில்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தூத்துக்குடியை மையமாக வைத்து வணிகம் செய்து வந்ததால் அவர்கள் தங்கள் போக்குவரத்து வசதிக்காக தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு கடந்த 1874ம் ஆண்டு ரயில் வழித்தடம் அமைத்தனர். தூத்துக்குடி ரயில் நிலையம் திறக்கப்பட்டு 150 ஆண்டுகளை நெருங்கி உள்ளது. தமிழ்நாட்டில் பழமைவாய்ந்த ரயில் நிலையமாக தூத்துக்குடி ரயில் நிலையம் விளங்கி வருகிறது. பெருமைமிக்க தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் ரயில்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே இருந்து வருகிறது. ரயில் சேவையை அதிகரிப்பதற்காக தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு ₹11,822 கோடி மதிப்பில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள், கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.