ஆலங்குடி: ஆலங்குடி அருகே அய்யனார், பெரிய கருப்பர், சின்ன கருப்பர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஆலங்குடி தாலுகா கல்லாலங்குடி கிராமத்தில் அமைந்து அருள்பாலித்து வரும் அய்யனார், பெரியகருப்பர், சின்னகருப்பர் மற்றும் பரிவார தெய்வங்கள் திருப்பணி கடந்த ஒரு வருடங்களாக நடைபெற்று வந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று கும்பாபிஷேகம் நடத்துவதென கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊரார்கள் முடிவு செய்து கடந்த மூன்று தினங்களாக யாகசாலை அமைத்து கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள் சிவாச்சாரியர்களால் நடத்தப்பட்டது.