முத்துப்பேட்டை, மார்ச் 14: முத்துப்பேட்டை அடுத்த நாச்சிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மீண்டும் காந்தி சிலை திறக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த நாச்சிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இருந்த பழமையான மார்பளவு காந்தி சிலை சில வருடங்களுக்கு முன்பு சேதமடைந்தது. இதனால் அதன் பீடத்திலிருந்து சமீபத்தில் அகற்றப்பட்டு பணிகள் நடந்து வந்த நிலையில், மீண்டும் சில தினங்களுக்கு முன் காந்தியின் மார்பளவு சிலை அங்கு நிறுவப்பட்டது. இந்த நிலையில் நேற்று புதிய சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் செந்தில்குமாரி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல் முன்னிலை வகித்தனர். முன்னதாக பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் தாஹிர் வரவேற்றார்.