திண்டுக்கல்: தாடிக்கொம்பு சர்வீஸ் ரோட்டில் தெரு விளக்குகள் எரியாததால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் நடமாடவே அச்சப்படுகின்றனர். திண்டுக்கல் அடுத்த தாடிக்கொம்பு பேரூராட்சி 5 கிராமங்கள், 63 குக்கிராமங்களை கொண்ட மிகப்பெரிய பேரூராட்சி ஆகும். இவ்வூர் வழியே செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து தாடிக்கொம்புவிற்குள் வருவதற்கு இரு பக்கமும் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சர்வீஸ் ரோட்டில் தினந்தோறும் திண்டுக்கல், வேடசந்தூர் பகுதிகளில் இருந்து அதிகளவு பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் தாடிக்கொம்பு நகருக்குள் வந்து செல்கிறது. தாடிக்கொம்புவிற்கு வரும் இரு சர்வீஸ் ரோடுகளிலும் தேசிய நெடுஞ்சாலை துறையால் அமைக்கப்பட்டுள்ள தெரு விளக்குகள் கடந்த சில மாதங்களாக எரிவதில்லை. மேலும் சில இடங்களில் விளக்குகள் இல்லாமல் கம்பங்கள் மட்டும்தான் நிற்கிறது. இதனால் இப்பகுதியில் இரவு நேரங்களில் செயின், பணம், செல்போன் உள்ளிட்ட வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுகிறது. இதுகுறித்து சமூகஆர்வலர்கள் கூறுகையில், ‘தாடிக்கொம்பு சர்வீஸ் ரோட்டின் இரு புறங்களிலும் ஓரமாக வீடுகள், கடைகள் உள்ளன. இரவு 9 மணிக்கு மேல் வீடுகள், கடைகள் அடைக்கப்பட்டு விளக்குகள் அணைத்தவுடன் இப்பகுதியின் பல இடங்கள் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.