திண்டுக்கல்: திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் மின் மயானமும், வேடப்பட்டியில் எரிவாயு மயானமும் உள்ளது. இதில் ஆர்.எம்.காலனியில் உள்ள மின்மயானம் மட்டுமே தற்போது வரை செயல்பாட்டில் உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் போது எரிவாயு மயானம் முறையான பராமரிப்பு இல்லாததால் கட்டிடங்கள் சிதிலமடைந்து விட்டது. கொரோனா காலத்தில் மட்டும் இந்த எரிவாயு மயானம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு உடல்கள் எரியூட்டப்பட்டன. அதன்பிறகு இந்த எரிவாயு மயானத்தை பயன்படுத்துவது குறைந்து போனது. இந்நிலையில் செயல்படாமல் உள்ள எரிவாயு மயானத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சந்தைரோடு வியாபாரிகள் சங்க தலைவர் நடராஜன், செயலாளர் வீரபாண்டி ஆகியோர் பொதுமக்கள் சார்பில் மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.