ஈரோடு: ஈரோடு கள்ளுக்கடை மேடு பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் விழாவில் நேற்று 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தி, அம்மனை வழிபட்டனர். ஈரோடு கள்ளுக்கடைமேடு பத்ரகாளியம்மன் குண்டம் விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்படும். நடப்பாண்டுக்கான குண்டம் விழா கடந்த மாதம் 21ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றமும், அதைத்தொடர்ந்து அம்மனுக்கு தினந்தோறும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு வழிபாடு நடைபெற்று வந்தது. கடந்த 5ம் தேதி காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம், பால் குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை குண்டம் பற்ற வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று அதிகாலை 5 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி தொடங்கியது.