காரைக்கால்: காரை பிரதேச அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன பொதுச்செயலாளர் ஷேக் அலாவுதீன் விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: காரைக்கால் மாவட்டத்தில் சாலை போடுதல், கட்டிடம் கட்டுதல், நகர பகுதியில் குடிநீர் வழங்குதல், கிராம பகுதிகளில் குடிநீர் வழங்கும் பணிகளை பராமரித்தல், நீர்ப்பாசன பிரிவு பணிகள் உள்ளிட்ட மக்களுக்கான முக்கிய தேவைகளை பூர்த்தி செய்து வரும் பொதுப்பணித்துறையில் 50 சதவீதத்திற்கும் மேல் பல்வேறு பதவிகள் காலியாக உள்ளன. அதனால், பொறியாளர்கள் அனைவருக்கும் கூடுதலாக பணிகள் வழங்கப்பட்டு, பணி செய்து வருகின்றனர். இதனால், தற்பொழுது பணிபுரிந்து வரும் பொறியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பணிச்சுமை ஏற்பட்டு மனதளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறையில் தற்பொழுது 2 கண்காணிப்பு பொறியாளர், 15 நிர்வாக பொறியாளர், 30 உதவி பொறியாளர், 100 இளநிலை பொறியாளர், 150 ஓவர்சிர், 120 ஒர்க் இன்ஸ்பெக்டர், 50 மெக்கானிக் மற்றும் 700 எம்டிஎஸ் பதவிகள் காலியாக உள்ளன. ஏராளமான பதவிகள் காலியாக உள்ளதால் பொதுப்பணித்துறையில் தற்பொழுது நடைபெற்று வரும் பல்வேறு பணிகளுக்கு பொறியாளர்களும், உதவியாளர்களும், கீழ்நிலை ஊழியர்களும் இல்லாமல் நடைபெற்று வருகின்றன. இதனால், பணிகளில் தேக்கம் ஏற்படுவது மட்டுமல்லாமல் பல்வேறு தவறுகளும், பணிகள் தரமற்றதாக அமையவும் வாய்ப்புகள் உள்ளன.