திட்டக்குடி, மார்ச் 8: திட்டக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மாசி மகத்தை திட்டக்குடி வெள்ளத்தில் நடத்த வேண்டும் என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசனிடம் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் மாசி மகம் திட்டக்குடியில் நடைபெற ஏற்பாடு செய்தார். இதனையடுத்து 100 ஆண்டுகளுக்கு பின் நேற்று முன்தினம் திட்டக்குடி வெள்ளத்தில் மாசி மக திருவிழா நடைபெற்றது. இதில் கடலூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் சேர்ந்த சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். தொடர்ந்து திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் வைத்தியநாத சுவாமி முக்கிய தெருக்கள் வழியாக வீதி உலா வந்தார். பின்னர் திட்டக்குடி சுற்றியுள்ள சுமார் 60க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் வெள்ளாட்டில் குவிந்தனர். பின்னர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
