காரைக்கால்: காரைக்கால் பாரதியார் சாலையில் போக்குவரத்து நெரிசலை தடுக்க ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று புதுச்சேரி எம்பியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. புதுச்சேரி மாநில பாஜக துணை தலைவரும் காரைக்கால் சர்வ மத சகோதர சங்க தலைவர் ஜி.என்.எஸ். ராஜசேகரன் புதுச்சேரி பாராளுமன்ற உறுப்பினர் செல்வகணபதியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். இந்த மனுவில் கூறியிருப்பதாவது: காரைக்கால்-பேரளம் ரயில் பாதை இணைப்புத் திட்ட பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே காரைக்கால் பேரளம் ரயில் பாதையில் காரைக்காலில் புதிய பேருந்து நிலையம் அருகே பாரதியார் ரோடு சந்திப்பில் மிக அதிக வாகனப் போக்குவரத்து உள்ள இடத்தில் முறையாக ரயில்வே கேட் அமைக்கப்படுவதை கடந்த ஓராண்டுக்கும் மேலாக வலியுறுத்தி வருகிறோம். ரயில்வே கேட் அமையும் இடத்திற்கு அருகிலேயே 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் மேல்நிலைப்பள்ளி மற்றும் காரைக்கால் பேருந்து நிலையம் ஆகியவை முறையே 20 மீட்டர் மற்றும் 30 மீட்டர் தூரத்தில் இந்த வழித்தடத்திற்கு மிக அருகில் உள்ளன.