நிலக்கோட்டை: நிலக்கோட்டை அடுத்த அம்மையநாயக்கனூர் பேரூராட்சிக்குட்பட்ட கொளிஞ்சிபட்டியில் தூய்மை இந்தியா பாரத இயக்கம் திட்டம் 2021-2022ன் படி வளமீட்பு பூங்கா மேம்படுத்தும் பணிகள், புதிதாக சுகாதார வளாகம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. மேலும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ராஜதானிக்கோட்டை அரண்மனைகுளம் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இப்பணிகளை தமிழ்நாடு அரசு பேரூராட்சிகளின் இயக்குனரக கண்காணிப்பு பொறியாளர் திருமாவளவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பணிகளை தரமாக மேற்கொள்ளவும், விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது பேரூராட்சி செயல் அலுவலர் பூங்கொடி மற்றும் திண்டுக்கல் மண்டல, மாவட்ட பேரூராட்சிகளின் அதிகாரிகள் உடனிருந்தனர்.