திருப்புத்தூர், மார்ச் 4: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் ஸ்ரீசௌமிய நாராயணப்பெருமாள் கோயிலில் வரும் 7ம் தேதி தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி இங்கு வருகை தரும் பக்தர்களுக்கு சுகாதாரமான முறையில் கழிப்பறைகள் மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீசௌமிய நாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி தெப்ப உற்சவ விழா சிறப்பாக நடைபெறும். இந்த தெப்ப உற்வத்திற்கு ஆயிரக்கணக்கானோர் வருவார்கள். இதில் முக்கிய நிகழ்வாக கோயில் தெப்பக்குளப் படிக்கட்டிலும், குளத்தைச் சுற்றிலும் பெண்கள் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். இதற்காக, ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சி மன்றத்தின் சார்பில், தெப்பம் நடைபெறும் இடத்தின் அருகில் சில இடங்களில் கழிப்பறை வசதி மற்றும் குடிநீர் வசதி செய்து தரப்படும்.