தென்காசி,மார்ச் 2: தென்காசி மாவட்டத்தில் 9 கிராம ஊராட்சிகளுக்கு தேசிய அளவிலான விருதுக்கு கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமையிலான கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளின் வறுமை இல்லாத மற்றும் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்ட ஊராட்சி, ஆரோக்கியமான ஊராட்சி, குழந்தைகளிடம் நட்பு பாராட்டும் ஊராட்சி, தண்ணீரில் தன்னிறைவு பெற்ற ஊராட்சி, தூய்மையான மற்றும் பசுமையான ஊராட்சி, உட்கட்டமைப்புகளால் தன்னிறைவுப் பெற்ற ஊராட்சி, சமூக பாதுகாப்புடைய ஊராட்சி, சிறந்த நிர்வாகத் திறன்கொண்ட ஊராட்சி, மகளிருடன் நல்லிணக்கம் கொண்ட ஊராட்சி ஆகிய ஒன்பது கருப்பொருட்களில் திறம்பட செயல்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு தேசிய அளவிலான ஊராட்சி விருதுகள் வழங்க தகுதியான ஊராட்சிகளை பரிந்துரை செய்வதற்காக மாவட்ட ஊராட்சி செயல்திறன் மதிப்பீட்டுக்குழுக் கூட்டம் கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் தலைமையில் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்றது.