காரைக்கால்: காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் ஷேக் அலாவுதீன் கூறியிருப்பதாவது: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் உள்ள 5 நகராட்சி மற்றும் 10 கொம்யூன் பஞ்சாயத்துகள் சுமார் 1300 ஊழியர்கள் மற்றும் 750 ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். இதில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு கடந்த 5 வருடங்களாக தொடர்ச்சியாக ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படாமல் உள்ளது. பிறகு அவ்வப்போது ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. குடிநீர் வழங்குதல், சாலை அமைத்தல், பராமரித்தல், சாக்கடை கட்டுதல், சுகாதார பணிகளை செய்தல், பிறப்பு - இறப்பு - திருமணங்களை பதிவு செய்தல், பதிவு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல பணிகளை செய்தும், அரசுக்கும் - மக்களுக்கும் பாலமாக இருந்து அரசின் திட்டங்களையும், அதேபோல் மத்திய அரசு அவ்வப்போது அமல்படுத்தும் திட்டங்களை கிராமங்கள் தோறும் அடித்தட்டு மக்கள் வரை கொண்டு செல்லும் உள்ளாட்சி ஊழியர்களுக்கு ஊதியமும், ஓய்வூதியமும் முறையாக வழங்கப்படாமல் இருப்பது ஊழியர்களை வஞ்சிக்கும் செயலாக உள்ளது.