தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஆவின் பால் தட்டுப்பாடு தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் நாசர், சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் ஆய்வு செய்தனர். தூத்துக்குடியில் கடந்த ஒரு வாரமாக ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் தூத்துக்குடியில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்டத்திற்கு தினசரி 38 ஆயிரம் லிட்டர் பால் வழங்கப்படும். ஆனால் கடந்த ஒரு வாரமாக குறைவாக 28 ஆயிரம் லிட்டர் பால் மட்டுமே வழங்கப்பட்டது. இதனால் பல பகுதிகளில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன் காலதாமதமாகவே இறக்குமதி செய்யப்பட்டு காலை 9 மணிக்கு பிறகு பால் வினியோகம் நடைபெற்றுள்ளது. இது பொதுமக்களுடைய பெரிய அளவில் அதிருப்தி ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்து புகார்களும் வந்தன. இதனைத் தொடர்ந்து நேற்று தூத்துக்குடி மாவட்ட ஆவின் அலுவலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். பால் கொள்முதல், விநியோகம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்த அமைச்சர்கள் பால் விநியோகத்தை பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் வழங்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர்.