திருவாடானை: திருவாடானை அருகே உள்ள துணை ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை அருகே பாண்டுகுடி ஆரம்ப சுகாதார நிலைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தளிர்மருங்கூர் துணை ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 50 ஆண்டுகளாக அப்பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த துணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தங்கி பணிபுரியும் வகையில் கிராம சுகாதாரச் செவிலியர் ஒருவரும், மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் ஒரு செவிலியரும் அங்கு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த துணை ஆரம்ப சுகாதார நிலைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தளிர்மருங்கூர், தேளூர், கூத்தனேந்தல், விஸ்வநாதயேந்தல், பாகனவயல்,புத்துவயல், அரியப்பவயல், குருமிலாங்குடி, கருங்காலக்குடி, மல்லனூர், பழங்குளம்,சேமவயல்,சேனவயல், முருகனேந்தல், கோனேரியேந்தல், செளந்தரபாண்டியபுரம் உட்பட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் முதலுதவி சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போல் அப்பகுதி கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு கால சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த துணை ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டி பல ஆண்டுகள் ஆகி விட்டதால் தற்சமயம் கட்டிட மேற்கூரையில் உள்ள சிமெண்ட் காரைகள் பெயர்ந்து அடிக்கடி கீழே விழுந்து விடுகிறது. மேலும் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை காலங்களில் அப்பகுதியில் பெய்த தொடர்மழையால் கட்டிட சுவர்களில் மழைநீர் இறங்கி ஊரல் ஏற்பட்டதால் தற்சமயம் அந்த கட்டிட சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆகையால் எந்த நேரத்திலும் இந்த கட்டிடம் இடிந்து கீழே விழும் அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி மக்கள் விபத்து மற்றும் பிற நோய்களுக்காக முதலுதவி சிகிச்சை எடுத்துக் கொள்ள சுமார் 15 கிலோ மீட்டர் தூரமுள்ள திருவாடானை மற்றும் தொண்டி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சுற்றி உள்ள இடங்களில் தனிநபர்கள் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. ஆகையால் கடந்த 5 ஆண்டுகளாக சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள இந்த கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டுமெனவும், அந்த இடத்தைச் சுற்றியுள்ள தனிநபர் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு புதிய துணை ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டித்தந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமெனவும் அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்ம, ‘‘இந்த துணை ஆரம்ப சுகாதார நிலையம் கட்டி பல ஆண்டுகள் ஆகி விட்டதால் கட்டிட சுவர்களில் விரிசல் ஏற்பட்டு மேற்கூரை சேதமடைந்துள்ளது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக இந்த ஆரம்ப துணை சுகாதார நிலைய கட்டிடம் சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இங்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வரும் நோயாளிகளும், பணியில் உள்ள 2 செவிலியர்களும் அச்சப்பட்டு இந்த துணை ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் செல்ல தயங்குகின்றனர். மேலும் இந்த கட்டிடத்தைச் சுற்றியுள்ள தனிநபர் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இந்த சேதமடைந்த துணை ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித் தந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்’’என்றனர்.