கூட்டுறவு சங்கத்தில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளையடிக்க முயற்சி: முன்னாள் ராணுவ வீரருக்கு 7 ஆண்டு சிறை

நெல்லை, செப்.30: நெல்லை அடுத்த நாங்குநேரி அருகே தளபதிசமுத்திரம் கீழூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் கடந்த 2011ம் ஆண்டு உதவி செயலாளர் சண்முகசங்கர், எழுத்தர் ராஜா, நகை மதிப்பீட்டாளர் ஜெயபால் ஆகியோர் பணியில் இருந்தனர். அப்போது  தளபதிசமுத்திரம் சிவன்  கோவில் வடக்குத் தெருவை சேர்ந்த உலகநாதனின் மகனும் மேகாலயா மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றிவந்தவருமான பன்னீர்செல்வம் என்பவர் நாங்குநேரி விநாயகர் சன்னதி தெருவைச் சேர்ந்த சிதம்பரத்தின் மகன் தாயப்பன் ஓட்டி வந்த காரில் அவருடன் சேர்ந்து கூட்டுறவு வங்கிக்கு வந்தார்.

இதில் பன்னீர்செல்வம், தான் பணியாற்றி வந்த படை பிரிவிலிருந்து தோட்டாக்களுடன் திருடிவந்த துப்பாக்கியில் சிறிது மாற்றம் செய்து, கூட்டுறவு வங்கியில் உள்ள நகை, பணத்தை கொள்ளையடிக்க கூட்டாளியுடன் சேர்ந்து திட்டமிட்டார். இதற்காக பணப்பெட்டகம் இருந்த இடத்தை காட்டுமாறு அங்கிருந்த ஊழியர்களிடம் பன்னீர் மிரட்டினார். மேலும் இதை ஏற்க மறுத்த சண்முகசங்கர், ராஜா ஆகியோர் மீது துப்பாக்கியால் சுட்டார். இதில் ஊழியர்கள் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. புகாரின் பேரில் ஏர்வாடி போலீசார் பதிவுசெய்த வழக்கை விசாரித்த நாங்குநேரி கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ராமதாஸ் நேற்று தீர்ப்பு வழங்கினார்.

இதில், பன்னீர்செல்வத்திற்கு  கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். மேலும் 7 ஆண்டு கால தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். இதில் அரசு சார்பில் கூடுதல் வக்கீல் ஜேம்ஸ்பால் ஆஜராகி வாதாடினார். இவ்வழக்கில் தொடர்புடைய தாயப்பன், ஏற்கனவே விசாரணையின் போது காலமாகிவிட்டார். தீர்ப்பை அடுத்து பன்னீர்செல்வத்தை போலீசார் கைதுசெய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: