நெல்லை, செப்.28: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெல்லை கோ-ஆப்டெக்ஸ் மூலம் நடப்பு ஆண்டில் ரூ.4.30 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நெல்லை சந்திப்பு காந்திமதி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிறுவனத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை நெல்லை ஆர்.டி.ஓ. சந்திரசேகர் துவக்கி வைக்க பாளை அரசு சித்த மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் சாந்த மரியா பெற்றுக் கொண்டார். பின்னர் ஆர்டிஓ சந்திரசேகர் கூறுகையில், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு ரகங்கள், பட்டுப் புடவைகள் 30 சதவீத தள்ளுபடியில் விற்பனை செய்கிறது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை சந்திப்பு காந்திமதி விற்பனை நிலையம், பாளை விற்பனை நிலையம், நெல்லை டவுன் கீழரதவீதி, நெல்லை டவுன் பட்டு மாளிகை ஆகிய இடங்களில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் அமைந்துள்ளன. நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2021) ரூ.2.73 கோடிக்கு ஜவுளி ரகங்கள் விற்பனை செய்யப்பட்டன. நடப்பு ஆண்டில் (2022) ரூ.4.30 கோடி விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.