சின்னாளபட்டி, செப். 27: சின்னாளபட்டி மற்றும் அம்பாத்துரை கிராம ஊராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் கரியன்குளத்தில் திடீரென்று தண்ணீர் பச்சை நிறமாக மாறி மீன்கள் செத்து மிதந்ததால் அதிகாரிகள் தண்ணீரை ஆய்வு செய்ய கொண்டு சென்றனர். சின்னாளபட்டியிலிருந்து அம்பாத்துரை செல்லும் வழியில் தேவி கருமாரியம்மன் கோவில் எதிரே உள்ளது. சுமார் 5.39ஹெக்டேர் (14 ஏக்கர்) நீர் பாசனம் பரப்பளவுள்ள இக்குளத்தில் தற்போது மழைநீர் தேங்கியுள்ளது. அம்பாத்துரை ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் இந்த குளத்தில் மூன்று ஆழ்துளை கிணறுகளை அமைத்து அதன்மூலம் குடிதண்ணீர் எடுத்து விநியோகம் செய்து வருகிறது. குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி நிற்பதால் குளம் மாசடைந்து வருகிறது.