தேவகோட்டையில் பாலித்தீன் பைகள் 2,500 கிலோ பறிமுதல்

தேவகோட்டை, செப்.24: தேவகோட்டையில் 2,500 கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனையொட்டி காய்கறி கடைகள், சாலையோர வியாபாரிகள், உணவகங்கள், மளிகை கடைகள், டீக்கடை உள்ளிட்ட இடங்களில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பாலித்தீன் பைகள் பயன்படுத்த கூடாது என அரசு அறிவுறுத்தி உள்ளது. தேவகோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பயன்படுத்துவதாக நகராட்சி அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.

தேவகோட்டை நகராட்சி ஆணையாளர் சாந்தி தலைமையிலான அலுவலர்கள் தியாகிகள் சாலையில் உள்ள குடோனில் அதிரடி சோதனை செய்தனர்.

அப்போது மூடைகளில் பாலித்தீன் பைகள் வைத்திருந்தது தெரியவந்தது. உடனடியாக அனைத்து பாலித்தீன் பைகளையும் கைப்பற்றி நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. தேவகோட்டையில் ஒரே நாளில் 2500 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. விற்பனை செய்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories: