தொண்டி பகுதிக்கு கூடுதல் பேருந்துகள் விட கோரிக்கை

தொண்டி,செப்.23: ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி வளர்ந்து வரும் நகர் பகுதியாகும். தொண்டியை மையமாக ைவத்து 50க்கும் மேற்பட்ட கிராம பகுதிகள் உள்ளது. இவர்கள் தங்களின் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைக்கு தொண்டியை நாடியே உள்ளனர். ஆனால் தொண்டி பகுதியில் போதிய நகர் பேருந்து வசதி கிடையாது. இது பல்வேறு இன்னல்களை ஏற்படுத்துகிறது. அதனால் பல்வேறு பகுதிக்கு வரும் நகர் பேருந்தை தொண்டி வரையிலும் இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானையிலிருந்து வட்டாணம் வரையிலும் வரும் நகர் பேருந்தை தொண்டி வரையிலும் இயக்கினால் அப்பகுதி மக்களுக்கு வசதியாக இருக்கும். இதேபோல் ஆர்.எஸ்.மங்கலத்திலிருந்து உப்பூர் வரையிலும் வரும் நகர் பேருந்தை தொண்டி வரையிலும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.

இதுகுறித்து சுலைமான் கூறியது, தொண்டியை சுற்றிலும் ஏராளமான கிராம பகுதிகள் உள்ளது. இப்பகுதி மக்கள் தினமும் வேலை, மருத்துவம் மற்றும் அன்றாட தேவைகளுக்கு தொண்டிக்கு வருகின்றனர். இவர்கள் வருவதற்கும் போவதற்கும் சிரமப்படுகின்றனர். அதனால் திருவாடானை- வட்டாணம் நகர் பேருந்தையும், ஆர்.எஸ்.மங்கலம்-உப்பூர் நகர் பேருந்தையும் தொண்டி வரையிலும் விரிவுபடுத்த வேண்டும். இதேபோல் பெங்களுரிலிருந்து தேவகோட்டை வரை வரும் அரசு விரைவு பேருந்தை தொண்டி வரையிலும் நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: