சின்னமனூர் அருகே மழைநீர் தேக்கத்தில் விழுந்த சிறுமி பலி

சின்னமனூர், செப். 7: சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி சமத்துவபுரத்தில் குடியிருப்பவர் சரவணன், கூலி வேலை செய்து வருகிறார்.இவரது மகள் தர்ஷினி ராணி (8). இங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று மாலை பள்ளிக்கூடம் முடிந்த பின்பு, ஓடைப்பட்டி பேரூராட்சியில் பூங்கா அமைக்கும் பணிகள் நடக்கும் பாதையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பூங்காவிற்காக பில்லர் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீர் தேங்கியிருந்தது. இந்த மழைநீர் தேங்கிய பள்ளத்தில் தர்ஷினி ராணி தவறி விழுந்துள்ளார். நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராத மகளை தேடி, சரவணன் சென்றுள்ளார். அப்போது மகளின் செருப்பு ஒன்று தனியாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அங்கிருந்த பள்ளத்தில் விழுந்து கிடந்த மகளை மீட்டு, சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால், அங்கு சிறுமி தர்ஷினி ராணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த ஓடைப்பட்டி போலீசார், சிறுமி விழுந்த பள்ளத்தை பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர்.

Related Stories: