நெல்லை, செப். 6: கருவூர் சித்தருக்கு மானூர் அம்பலவாணர் கோயிலில் சுவாமி நெல்லையப்பர், அம்பாள் காந்திமதி காட்சி அருளும் வைபவம் நேற்று காலை விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். கீரனூரில் அந்தணர் குலத்தில் பிறந்தவர் கருவூர் சித்தர். அவர் தம்மை அறிந்த தலைவனை தன்னுள் கண்ட பெருமை உடையவர். பல்வேறு சிவ தலங்களுக்கு சென்று ஈசனை தரிசித்து வரங்கள் பெற்று நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோயிலுக்கு வந்த கருவூர் சித்தர் கோயில் வாசல் முன் நின்று சுவாமி நெல்லையப்பரை ‘‘நெல்லையப்பா’’ என மூன்று முறை அழைத்தார். கருவூர் சித்தரை சோதிக்க எண்ணியதால் அவர் கூப்பிட்ட குரலுக்கு நெல்லையப்பர் வரவில்லை. இதனால் கோபமுற்ற சித்தர் இங்கு இறைவன் இல்லை எனவே எருக்கு எழ சாபமிட்டு மானூர் அம்பலவாணர் கோயில் சென்றடைந்தார். அங்கு நெல்லையப்பர் கருவூர் சித்தருக்கு காட்சி அளித்தார். இந்த வைபவம் ஆண்டுதோறும் ஆவணி மூலத் திருவிழாவின் 10வது நாளில் மானூர் அம்பலவாணர் சுவாமி கோயிலில் நெல்லையப்பர், காந்திமதி அம்மன் ரிஷப வாகனத்தில் ஆவணி மூல மண்டபத்தில் எழுந்தருளி கருவூர் சித்தருக்கு காட்சி கொடுக்கும் வைபவமாக நடக்கிறது.