தூத்துக்குடி, ஆக. 12: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் தேசிய கொடி பயணத்துக்கு தூத்துக்குடியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய விடுதலையின் 75ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு சுதந்திர அமுத பெருவிழா கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் நடந்து வருகிறது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் சார்பில் சுதந்திரப் பெருவிழா மற்றும் மாநில மாநாட்டை முன்னிட்டு குடியாத்தம் முதல் கன்னியாகுமரி வரை தேசிய கொடி பயணம் நடந்து வருகிறது. கடந்த 8ம் தேதி வெள்ளையனே வெளியேறு இயக்க 80ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு குடியாத்தத்தில் இந்த பயணம் துவங்கியது. விடுதலைக்காக பாடுபட்ட பல்வேறு தியாகிகள் வசித்த ஊர்களின் வழியாக செல்லும் இந்த பயணம் இன்று கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் முடிவடைகிறது.
விடுதலைக்கு பிறகு முதல் கொடியை தயாரித்த குடியாத்தத்தை சேர்ந்த கோட்டா வெங்கடாசலம் என்பவரது குடும்பத்தினர் தயாரித்த தேசிய கொடியை கொடி பயணத்தில் ஊர்வலமாக கொண்டு வந்தனர். தூத்துக்குடி வந்த தேசிய கொடி பயணத்திற்கு வஉசி கல்லூரியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் வஉசி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தூத்துக்குடி வஉசி கல்லூரி முதல்வர் வீரபாகு, தமுஎகச மாநில துணை பொதுச்செயலாளர் களப்பிரான் ஆகியோர் தேசிய கொடியை பெற்றுக்கொண்டனர். இதில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சங்கரலிங்கம், மாவட்ட துணை தலைவர் சிவனாகரன், மாநகர் செயலாளர் முத்துசிப்பி தாமோதரன், மாநகர் தலைவர் சுப்பிரமணியன், மாவட்டக்குழு உறுப்பினர் விக்னேஷ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.