எட்டயபுரம், ஆக. 8: நம் நாட்டின் ‘தேசிய கவி’ பாரதியார் பிறந்த எட்டயபுரத்தில் முறையான பராமரிப்பின்றி பள்ளி விளையாட்டு மைதானம் போர்க்கால அடிப்படையில் விரைந்து சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். ஓடி விளையாடு பாப்பா. நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா. கூடி விளையாடு பாப்பா என்று விளையாட்டின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்திய தேசிய கவிஞரும், சுதந்திர போராட்ட வீரருமான பாரதியார் பிறந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் அவரது நினைவு மண்டபத்திற்கு எதிரே அரசு உதவி பெறும் ராஜா மேல்நிலைப்பள்ளி கட்டுபாட்டில் உள்ள 5 ஏக்கர் பரப்பளவிலான அரசு விளையாட்டு மைதானம் முறையான பராமரிப்பின்றி புதர் மண்டிக்கிடக்கிறது. இப்பள்ளியில் எட்டயபுரம் மற்றும் சுற்று வட்டார 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். ஆரம்பத்தில் முறையாகப் பராமரிக்கப்பட்டு வந்த இந்த விளையாட்டு மைதானத்தை மாணவர்களும், இளைஞர்களும் கால்பந்து, கைப்பந்து, கிரிக்கெட் விளையாடியதோடு ஓட்ட பயிற்சியும் பெற்று வந்தனர். பின்னர் முறையான பராமரிப்பின்றி சீமைகருவேல மரங்கள் முளைத்து இம்மைதானம் புதர் மண்டிக்கிடக்கிறது. இதனால் விளையாட மைதானம் இன்றி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். இதே போல் ராணுவம், போலீஸ் உள்ளிட்ட பணிகளுக்கு செல்ல ஓட்டப்பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்களும் விளையாட்டு மைதானம் இன்றி மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உயிரை பணயம் வைத்து ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.