சேலம், ஆக.4: ஆடிப்பெருக்கையொட்டி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். ஆடிப்பெருக்கையொட்டி நேற்று, சேலம் கோட்டை மாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், குங்குமம், சந்தனம், விபூதி உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முகூர்த்தக்காலுக்கு பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றினர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். பூட்டு முனியப்பன் கோயிலில் முனியப்பனுக்கு அசைவ உணவால் படையலிட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. கோயில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து முனியப்பனை வழிபட்டனர். சேலம் ஜாகீர் அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் கோயிலில் பக்தர்களின் காவடி ஊர்வலம் நடந்தது.