மயிலாடுதுறை, ஆக. 3: மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நாஞ்சில்நாட்டில் எழுந்தருளியிருக்கும் முத்தாட்சி அம்மனுக்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு பூச்சொரிதல் மற்றும் புஷ்ப பல்லக்கு நடைபெற்றது. இராமர் பிறந்த அயோத்தி மாநகரிலிருந்து இடம் பெயர்ந்து வந்த பட்டாரியர்கள் தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் தங்கி, அங்கிருந்து மயிலாடுதுறை பகுதியில் குடியேறியதாக ஐதீகம். அதை நினைவு படுத்தும் வகையில் மயிலாடுதுறையில் அவர்கள் தங்கியுள்ள பகுதிக்கு நாஞ்சில்நாடு என்று பெயரிட்டு வசித்து வருகின்றனர். மேலும் தங்களின் குலதெய்வமான முத்தாட்சியம்மனுக்கு ஆலயம் அமைத்து வழிபட்டு வருகின்றனர். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடிப்பூரம் தினத்தன்று பூச்சொரிதல் விழா மற்றும் புஷ்ப பல்லக்கு உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி மாலையில் அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.