நாமக்கல், ஜூன் 9: ராசிபுரம் அருகே போதமலைக்கு சாலை அமைக்க, பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியதற்கான கடிதத்தை, கலெக்டரிடம் அமைச்சர் மற்றும் எம்பி., வழங்கினர். நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் போதமலை உள்ளது. இங்கு கீழுர், மேலூர், கெடமலை ஆகிய குக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 3,500க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். போதமலை, கீழுர் ஊராட்சிக்கு வடுகம் முதல் மேலூர் வரை மற்றும் புதுப்பட்டி முதல் கெடமலை வரை, வனப்பகுதி வழியாக புதிய சாலை அமைக்க பல்லாண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் கீழ் செயல்படும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம், போதமலையில் உள்ள கீழூர், மேலூர் மலைக் கிராமங்களுக்கு, 34 கி.மீ தொலைவிற்கு சாலை அமைக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது.