விராலிமலை, ஜூன்2: விராலிமலை அருகே விட்டமாப்பட்டி குளத்தில் பாரம்பரியமிக்க மீன்பிடி திருவிழா நடைபெற்றது. விராலிமலை அருகே கடப்பட்டி முத்துமாரியம்மன் கோவில் முன்பு உள்ள விட்டமாபட்டி குளத்தில் கடந்த வருடம் பெய்த பருவமழை காரணமாக நீர்நிரம்பி இருந்தது. சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக குளத்தில் நீர் வற்றாமல் இருந்ததால் சிறிய பெரிய வகை மீன்கள் இருந்து வந்தது. இந்நிலையில் குளத்தின் நீரானது தற்போது வற்றியதால் மீன்பிடி திருவிழா நடத்துவது என ஊர் பொதுமக்கள் சார்பாக முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று காலை மீன்பிடி திருவிழாவானது நடத்தப்பட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மீன்பிடி திருவிழா நடைபெறுவதால் கடப்பட்டி, கல்குடி, பொருவாய் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அதிகாலையிலேயே குளத்திற்கு வந்தனர்.