தஞ்சாவூர், மே 30: காவிரி டெல்டா பகுதிகளில் குறுவையில் அதிக மகசூல் பெறுவதற்கு கீழ்கண்ட சாகுபடி உத்திகளை விவசாயிகள் கையாளுமாறு ஆடுதுறை, தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் சுப்ரமணியன் யோசனை தெரிவித்துள்ளார். மேட்டூர் அணை நீர் இந்த வருடம் கடந்த 24ம் தேதி நிறந்து விடப்படுவதால் விவசாயிகள் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய குறுகிய கால ரகங்களான ஏடிடீ 53, ஏடிடீ 56, ஏடிடீ 57, கோ 51, கோ 54, கோ 55 மற்றும் டிபிஎஸ் 5 ரகங்களை தேர்வு செய்யுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள். இதில் டிபிஎஸ் 5-ஐ விடுத்து ஏனைய ரகங்கள் சன்ன மற்றும் அதிசன்ன வகை ரகங்களாகும். இந்த ரகங்களை தேர்வு செய்வதன் மூலம் அதிக மகசூல் பெறுவதுடன் எளிதில் விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் சன்ன ரகங்களை பயரிடும் போது விவசாயிகளுக்கு நல்ல மககுலும் மற்றும் நல்ல விலையும் எந்தவித சிரமமும் இன்றி விற்கவும் வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் தாமதமின்றி மே மாதத்தில் நாற்றாங்கால் தயாரித்து நடவு பணிகளை விரைந்து மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாமதமாக விதைக்கும் பட்சத்தில் குறுவை பயிரின் அறுவடை வடகிழக்கு பருவமழை காலத்தில் அமைந்துவிடும். இதனால் அதிக அறுவடை சேதம் மற்றும் மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, முன்கூட்டியே விதைப்பதனால் வடகிழக்கு பருவ மழையினால் ஏற்படும் சேதத்தில் இருந்து குறுவை பயிர் அறுவடையை காத்து நல்ல மகசூல் பெறமுடியும்.