திருவாரூர், மே 26: திருவாரூரில் அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த 2003ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் திருவாரூரில் நேற்று கலெக்டர் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ரெகுநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் ஜாகிர்உசேன், மாவட்ட செயலாளர் நாகேஸ்வரன் மற்றும் பொறுப்பாளர்கள் எட்வர்டு, பாஸ்கரன், கமலக்கண்ணன், ரவிச்சந்திரன், கார்த்திக், அமுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.