பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன்
நத்தம், மே 25: நத்தம் அசோக் நகர் பகவதி அம்மன் கோயில் வைகாசி திருவிழா கடந்த மே 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தது. மறுநாள் காலை கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் சந்தன கருப்பு சுவாமி கோயிலில் இருந்து பக்தர்கள் கன்னிமார் தீர்த்தம் அழைத்து வரப்பட்டது. பின்னர் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்ததையடுத்து பக்தர்கள் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. மே 20ம் தேதி காலையில் கோயில் முன்பாக சிறப்பு அன்னதானம் நடந்தது. அன்று மாலை 108 திருவிளக்கு பூஜை வழிபாடு நடந்ததையடுத்து ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. நேற்று காலையில் அம்மன் குளத்தில் இருந்து பக்தர்கள் பால்குடம், சந்தன குடம், அக்னி சட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது . பின்னர் மாலையில் முளைப்பாரி ஊர்வலம், தொடர்ந்து இரவு அம்மன் வாண வேடிக்கையுடன் தங்கரதத்தில் நகர்வலம் வந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்/ இன்று காலை மஞ்சள் நீராட்டு விழா, அரண்மனை பொங்கல் வைத்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் ராமநாதன், திருவம்பலம், சந்தானம், சுந்தரராஜன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.