சிவகங்கை, மே 20: சிவகங்கையில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. நகர்மன்றத் தலைவர் துரைஆனந்த் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து, ஜோன்ஸ்ரூசோ முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேசியதாவது: தமிழக முதல்வரின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன. பத்தாண்டு காலமாக மத்திய அரசிடம் ஆட்சியை அடகு வைத்தவர்கள் அதிமுகவினர். ஆனால் இன்று மத்திய அரசை தட்டிக் கேட்கின்ற விதத்தில் அவர்களிடம் கேட்டு பெற வேண்டிய உரிமைகளை பெற்றிட முனைப்புடன் செயல்படுகிறார் முதல்வர். இன்று இந்தியாவிற்கே முன் மாதிரியாக தமிழ்நாடு உள்ளது. இவ்வாறு பேசினார்.
முன்னாள் மத்திய இணை அமைச்சர் பழனிமாணிக்கம், பத்தாண்டு காலமாக எதற்கெடுத்தாலும் எந்தத் துறையிலும் லஞ்சம் என்ற அளவிற்கு ஒரு கொடுமையான ஆட்சி நடத்தி, எதில் லாபம் தேடலாம் என்ற நோக்குடன் ஆட்சி நடத்தியவர்கள் தான் அதிமுகவினர். இல்லம் தேடி மருத்துவம் என்ற ஒரு மகத்தான திட்டத்தை தந்தவர் முதல்வர். கொரோனா காலக்கட்டத்தில் பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர் சமுதாயத்திற்காக இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளார் முதல்வர். அன்றைய ஆட்சியாளர்கள் நீட் தேர்வை ஒத்துக் கொண்டனர். இன்றோ கூடாது என இறுதி வரை போராடுகிறார் நமது முதல்வர். ஒராண்டு காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி தந்துள்ளார் முதல்வர் என்று பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தென்னவன், எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார், மானாமதுரை நகர்மன்றத் தலைவர் மாரியப்பன் கென்னடி, சிவகங்கை நகர்மன்ற துணைத்தலைவர் கார்கண்ணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனிசெந்தில்குமார், மகளிரணி அமைப்பாளர் பவானிகணேசன், நகர் இளைஞரணி அமைப்பாளர் அயூப்கான் மற்றும் திமுகவினர், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.