போடி, மே 18: போடி அருகே உள்ள நாகலாபுரம் கிழக்குத்தெருவைச் சேர்ந்தவர் பழனிச்சாமி இவரது மகன் சந்திரன் (36), கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு சந்திரன் இறந்ததால், அவரது உறவினர்கள், நண்பர்கள் துக்க நிகழ்வுக்கு வந்தனர். இந்நிலையில், நேற்று சந்திரனின் உடலை மயானத்தில் அடக்கம் செய்துவிட்டு வந்தனர். அப்போது சந்திரனின் பெரியப்பா பழனிச்சாமியின் அண்ணன் முருகன் (56), தம்பி மகன் இறந்த வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு அவரும் இறந்தார். இரண்டாவது முறையாக மயானத்திற்கு சென்று முருகனின் உடலை அடக்கம் செய்தனர். நாகலபுரம் கிராமம் சோகத்தில் மூழ்கியது.