கோவை, மே 10: தமிழ் நாட்டில் தொழில் முனைவோர்களுக்கு உகந்த மாவட்டமாக கோவை உள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ‘தி ஸ்டார்ட் அப்ஸ் அகாடமி’ சார்பில் தொழில் முனைவோர்களுக்கு ‘ஸ்டார்ட் அப் துருவ்’ விருது வழங்கும் விழா கோவை அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். தொடர்ந்து ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வரும் 44 நிறுவனங்களுக்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விருதுகளை வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
கடந்த 2021ம் ஆண்டு பட்ஜெட்டில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு என தனியாக இடம் கிடையாது என அறிவிக்கப்பட்டது. தேசிய பாதுகாப்பு தொடர்புடைய விவகாரங்களை தவிர தனியாருக்கு எங்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கு தேவையானதை தொலை நோக்கு பார்வையுடன் இந்த அரசு செய்து வருகின்றது. சிறிய தொழில்கள்தான் நாட்டின் முதுகெலும்பாக உள்ளது.
கோவை ஸ்டார்ட் அப் துறையில் முன்னோடியாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் தொழில் முனைவோர்களுக்கு உகந்த மாவட்டமாக கோவை மாவட்டம் உள்ளது. பெங்களூர், ஐதராபாத் போன்ற நகரங்கள் ஸ்டார்ட் அப் நகரங்களாக உள்ளன. அதேபோல் கோவையும் வளரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஸ்டார்ட் அப் தொழில்களை துவக்க ஆக்கப்பூர்வமான கொள்கைகள் மற்றும் ஆலோசனைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன், ஸ்டார்ட் அப் அகாடமி தலைவர் கார்த்திகேயன், செயலாளர் வெங்கடேஷ், எல்எம்டபிள்யு தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.