திருமயம், ஏப்.13: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பணிமனையில் இருந்து பள்ளத்தூர், கானாடுகாத்தான், ஊனையூர் வழியாக திருமயம் வரை தடம் எண் 8ஏ டவுன் பஸ் பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்தது. இதனால் காலை நேரம் திருமயம் சுற்று வட்டார பகுதியில் இருந்து காரைக்குடி பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகம், தினக்கூலி வேலைக்கு செல்வோர் பயனடைந்து வந்தனர். இதனிடையே கொரோனா தொற்று பரவல் ஊரடங்கு காலத்தின் 8ஏ டவுன் பஸ் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை நிறுத்தப்பட்ட 8ஏ டவுன் பஸ் மீண்டும் இயக்கப்படவில்லை. இதனால் திருமயம் சுற்று வட்டார பகுதியில் இருந்து பள்ளத்தூர், கானாடுகாத்தான், காரைக்குடியில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் பணம் கொடுத்து தனியார் பஸ்களில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.