சிவகங்கை, ஏப்.12: சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் கோவில் மண்டபம் ஒன்றில் 13ம் நூற்றாண்டு கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. நாட்டரசன்கோட்டையில் இடிந்த மண்டபம் ஒன்றில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. இது குறித்து ஆய்வு செய்த தொல்நடைக்குழு நிறுவனர் காளிராசா, செயலாளர், நரசிம்மன், சரவணன் ஆகியோர் தெரிவித்ததாவது: சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் வீரகண்டான் ஊரணி கரையின் கிழக்குப் பகுதியில் இடிந்த நிலையில் உள்ள உடையவர் கோவில் தெற்கு மற்றும் மேற்கு சுவரில் 9 துண்டுக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. வீர கண்டான் ஊரணிக் கரையில் மேற்குப் பகுதியை விடுத்து மற்ற பகுதிகள் அனைத்தும் கோவில்களால் சூழப்பட்டுள்ளன. அதில் உடையவர் கோவில் என அழைக்கப்படும் இடம் இடிபாடுடன் கூடிய முகப்பு மண்டபமும் அதையொட்டிய பின்பகுதியில் கருவறையுடனும் அமைந்துள்ளது. உடையவர் என்பது ராமானுஜரின் 12திருநாமங்களில் ஒன்றாக அழைக்கப்படுகிறது.