புதுக்கோட்டை நகராட்சியில் வார்டு நிலைக்குழு தேர்தல் திமுக உறுப்பினர்கள் தேர்வு

புதுக்கோட்டை, ஏப்.2: புதுக்கோட்டை நகராட்சியில் நடைபெற்ற வார்டு நிலைக்குழு தேர்தலில் தி.மு.க உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய நகராட்சிகளிலும் அரிமளம், அன்னவாசல், ஆலங்குடி, கறம்பக்குடி, கீரனூர், கீரமங்கலம், இலுப்பூர், பொன்னமராவதி ஆகிய 8 பேரூராட்சிகளிலும் வரிவிதிப்பு மேல் முறையீட்டு குழு, நியமனக்குழு, ஒப்பந்த குழு உறுப்பினர்களுக்கான மறைமுக தேர்தல் நேற்றுமுன்தினம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் நகராட்சி, பேரூராட்சிகளிலும் வரிவிதிப்பு அமல்முறையீட்டு குழுவில் 4 உறுப்பினர்களும், நியமன குழுவில் நகராட்சி, பேரூராட்சிகளில் தலா ஒருவரும், ஒப்பந்த குழுவில் நகரட்சியில் தலா ஒரு உறுப்பினரும் தேர்ந்தெடுக்கப்படுவர். புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டுகளிலும் 27 வார்டுகளில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியினரும், 8 வார்டுகளில் அதிமுக உறுப்பினர்களும், 7 வார்டுகளில் சுயேட்சை உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் நிலைக்குழுக்குழு தேர்தல் புதுக்கோட்டை நகர்மன்ற கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் கவுன்சிலர்களை தவிர வேறு யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அதன்பின் வந்திருந்த உறுப்பினர்களிலும் நகராட்சி அலுவலர்கள் கையெழுத்து பெற்றனர். இதில் அதிமுக கவுன்சிலர்கள் தேர்தலில் பங்கேற்கவில்லை. அதை தொடர்ந்து நியமன குழு உறுப்பினருக்கு 36-வது வார்டு உறுப்பினர் வளர்மதியும், ஒப்பந்தக்குழு உறுப்பினருக்கு 28-வது வார்டு உறுப்பினர் எட்வர்ட் சந்தோசநாதனும், வரிவிதிப்பு மேல்முறையீடு குழு உறுப்பினருக்கு 39வது வார்டு உறுப்பினர் ராஜேஸ்வரியும், 20வது வார்டு உறுப்பினர் ரமேஷ்பாபுவும், 30-வது வார்டு உறுப்பினர் லதாவும், 5-வது வார்டு உறுப்பினர் அடைக்கலம் ஆகிய 4 உறுப்பினர்கள் உள்பட அனைவரும் போட்டியின்றி தேர்வானதாக நகராட்சி ஆணையர் நாகராஜன் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு தலைவர், துணை தலைவர், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக நகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படிருந்தது.

Related Stories: