வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் வாரிசுகள் நிவாரணத்திற்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

வேலூர், ஏப்.2:வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் வாரிசுகள் நிவாரணத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளியிட்டள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின் வாரிசுகளுக்கு கருணைத் தொகை வழங்குவதற்கு www.tn.gov.in இணையதளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதி செய்யும் குழுவின் மூலம் பரிசீலிக்கப்பட்டு, நிவாரண நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி நிவாரண நிதியுதவி வழங்குவது தொடர்பாக வழிமுறைகளை தெரிவித்துள்ளது. கடந்த 20ம் தேதிக்கு முன்னர் ஏற்பட்ட கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் www.tn.gov.in என்ற இணைய முகவரியில் வருகிற மே மாதம் 18ம் தேதிக்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும்.கடந்த 20ம் தேதிக்கு பின்னர் ஏற்பட்ட கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் இறப்பு நிகழ்ந்த 90 நாட்களுக்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும்.மேற்குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் நிவாரணம் கோரி மனு சமர்ப்பிக்க இயலாதவர்கள் அதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு பெறப்படும் முறையீட்டு மணுவினை ஒவ்வொரு இனமாக தகுதியின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு பரிசீலனை செய்து தீர்வு செய்யும். எனவே கொரோனா தொற்று நோயின் காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினர் மேற்கண்ட உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, உரிய காலத்தில் மனு செய்து நிவாரணம் பெற்று பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: