திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம் பூனிமாங்காடு காலனியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இதில், 18 சிறுமிகள், 17 சிறுவர்கள் என மொத்தம் 35 குழந்தைகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், வழக்கம்போல் நேற்று அங்கன்வாடி மையத்திற்கு 17 குழந்தைகள் வந்திருந்தனர். மதியம் உணவு இடைவேளையின்போது அங்கன்வாடி ஆசிரியர் மற்றும் சமையலர், உணவு வழங்குவதற்கு 15 குழந்தைகளை கட்டிடத்திலிருந்து வெளியே அழைத்து வந்தனர். அப்போது, விமல்ராஜ்(6) மற்றும் தீனா(5) ஆகிய இரண்டு குழந்தைகள் அங்கன்வாடி மைய கட்டடத்தில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கன்வாடி மைய கட்டிடத்தின் மேற்கூரை சிமென்ட் தளம் திடீரென பெயர்ந்து சிறுவர்கள் மீது விழுந்தது. இதில் விமல்ராஜ் பலத்த காயமடைந்தான். தீனாவுக்கு லோசான காயம் ஏற்பட்டது.