காரைக்கால், மார்ச் 25: காரைக்கால் பொய்யாதமூர்த்தி விநாயகர் கோயில் முகப்பு மண்டபத்தை நீதிமன்ற உத்தரவின்படி இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்ட எம்எல்ஏ நாஜிம் உள்பட 2 எம்எல்ஏக்கள் மற்றும் சிலரை போலீசார் நேற்று கைது செய்தனர்.காரைக்காலில் உள்ள பொய்யாத மூர்த்தி விநாயகர் கோயில் வாசலில் மாதாகோயில் வீதி சாலை நடுவே கோயில் முகப்பு மண்டபம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது .இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் தொடரப்பட்ட வழக்கில், கடந்த 18ம் தேதி கோர்ட் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில், பொது இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயில் முகப்பு மண்டபத்தை, வரும் 28ம் தேதிக்குள் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கோர்ட்டு உத்தரவுப்படி கோயில் முகப்பு மண்டபத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்றுமுன்தினம் இந்து அமைப்பினர் மற்றும் பாஜக கட்சியினர் காரைக்கால் மாவட்டம் முழுவதும் பந்த் அறிவித்து கடைகள் அடைக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று பொய்யாத மூர்த்தி கோயில் முகப்பு மண்டபம் இடிக்க போவதாக வந்த செய்தி அறிந்து காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் தலைமையில், நிரவி திருப்பட்டினம் எம்.எல்.ஏ நாக தியாகராஜன் மற்றும் சர்வ மதத்தினர், பொதுமக்கள் பலர் பொய்யாத மூர்த்தி கோயில் வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.