நாமக்கல், மார்ச் 23: பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் நாட்களை பணிநாட்களாக கருத வேண்டுமென முதுகலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து நேரடி நியமனம் பெற்ற முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு பள்ளிக்கல்வி கமிஷனர் நந்தகுமாருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் மாவட்டத்திற்குள் நடைபெற்ற பொது மாறுதல் கலந்தாய்வு ஒரே நாளில் எந்த வித தாமதமும் இன்றி நடைபெற்றது. ஆனால், மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் ஒரு சில பாடங்களுக்கு ஆசிரியர் பணிமூப்பு பட்டியல் தயாரிப்பதில் ஏற்பட்ட தாமதம், மாவட்டம் விட்டு மாவட்டம் நடந்த பணி நிரவல் கலந்தாய்வு ஆகியவை இன்டர்நெட் தொழில்நுட்ப கோளாறுகளால் அவ்வப்போது தாமதம் ஏற்பட்டு நீண்டு கொண்டு போனது. இதனால், ஒரு சில பாடங்களுக்கு ஒரு நாளில் முடிய வேண்டிய கலந்தாய்வு இரண்டு, மூன்று நாட்களானது. அவ்வாறு நடந்தும் ஆசிரியர்கள் இரவு, பகல் பாராது காத்திருந்து பணிமாறுதல் பெற்றுச் சென்றனர்.