அலங்காநல்லூர், மார்ச் 23: பாலமேடு இந்து நாடார்கள் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன், மாரியம்மன் கோவில் பொங்கல் உற்சவ விழா நடைபெற்றது. முன்னதாக பத்திரகாளியம்மனுக்கும், மாரியம்மனுக்கும் சக்தி கரகம் அலங்காரம் செய்து மயில், மாடு, ஆடு கரகத்துடன் வாணவேடிக்கை முழங்க நகர்வலம் வந்தது. பின்னர் பக்தர்கள் அக்கினி சட்டி, பால்குடம், மாவிளக்கு, வேல் குத்தி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். மாரியம்மன் பூப்பல்லக்கு அலங்காரத்தில் முன்வர முளைப்பாரி நகர்வலம் பின்னால் வந்தது. பின்னர் அம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேகம் செய்து முளைப்பாரிகளை ஆற்றில் கரைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை பாலமேடு இந்து நாடார்கள் உறவின்முறை சங்கம் செய்திருந்தது.