நீடாமங்கலம், ஜன.31: கொரடாச்சேரி அருகே மேல எருக்காட்டூரைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி மகன்கள் அசோகன்(62), அன்பழகன் (61), முருகேசன்(48). இவர்கள் அண்ணன் தம்பி ஆவார்கள். இதில் அசோகன், அன்பழகன் இருவருக்கும் இடம் மற்றும் நில பிரச்னைகள் இருந்து வந்தது. இவர்கள் இருவரும் எருக்காட்டூரில் விவசாயம் செய்து வந்த நிலையில் அசோகன் தனக்கு சொந்தமான இடத்தில் இரும்பு முள்வேலி வைத்துள்ளார். அதனை அன்பழகன் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு வந்து வேலியை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் இரண்டு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இவர்கள் அரிவாள், கம்பி, கட்டை, கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இது குறித்து அசோகன் கொரடாச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது வேலியை சேதப்படுத்தியதோடு அதனை தடுக்க வந்த தனது மனைவி சாந்தாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியுள்ளார். அதே போன்று அன்பழகனும் தன்னை அசோகன் உள்ளிட்ட அவரது உறவினர்களும் நண்பர்களும் தாக்கியதாக புகார் அளித்துள்ளார்.