பூதலூரில் முதியவர் பைக்கில் ரூ.1.50லட்சம் திருட்டு

வல்லம், ஜன.28: பூதலூரில் முதியவர் பைக்கில் வைத்திருந்த ரூ.1.50 லட்சம் பணம் திருடுபோனது குறித்து பூதலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை மாவட்டம், பூதலூர் கூட்டுறவு காலனியை சேர்ந்த தென்னரசு மகன் ரவீந்திரன் (59). இவர் கடந்த 13ம் தேதி திருவையாறு அருகே நடுவச்சேரி மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து ரூ.2.40 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு பூதலூருக்கு வந்தார். பின்னர் நால்ரோடு பகுதியில் தனது உறவினரிடம் ரூ.85 ஆயிரம் பணத்தை கொடுத்து விட்டு மீதம் இருந்த தொகையை பையில் போட்டு பைக் டேங்க் கவரில் வைத்துள்ளார். தொடர்ந்து வீட்டுக்குச் சென்ற ரவீந்திரன் பைக்கை வீட்டு முன்னால் நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பைக் கவரில் இருந்த பணப்பையை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் பணப்பை கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் பூதலூர் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகஜீவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Related Stories: