விருத்தாசலம், ஜன. 7: விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள இளங்கியனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(60), இவரது மனைவி கொளஞ்சியம்மாள்(55). இவர்களது மகன் வேல்முருகனுக்கு திருமணமாகி அகிலேஷ்வர்(12), சரவணகிருஷ்ணன்(6) என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 30ம் தேதி கொளஞ்சியம்மாள் தனது வீட்டில் உணவு சமைத்துள்ளார். அப்போது சாப்பாட்டுக்கு முள்ளங்கி சாம்பார் செய்து கொளஞ்சியம்மாள் மற்றும் சுப்பிரமணியன் சாப்பிட்டுள்ளனர். தொடர்ந்து பேரன் சரவணகிருஷ்ணன் மற்றும் அருகிலுள்ள வீட்டைச் சேர்ந்த பிரபு மகன் நிதிஷ்(8), பிரியதர்ஷினி(4) ஆகியோருக்கும் கொடுத்துள்ளனர். இதனை சாப்பிட்ட கொளஞ்சியம்மாளுக்கு கடந்த 30ம் தேதியன்று வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது. உறவினர்கள் அருகில் உள்ள கூத்தக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக, சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 4ம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.