வருசநாடு: தும்மக்குண்டு ஊராட்சியில் சிதிலமடைந்த ரேஷன் கடை மேற்கூரையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடமலை-மயிலை ஒன்றியம், தும்மக்குண்டு ஊராட்சி மன்ற வளாகத்தில், வருசநாடு (எம்பி 92) தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் இயங்கும் ரேஷன் கடை உள்ளது. இந்த கடை மூலம் 750க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். உரிய பராமரிப்பில்லாததால், இந்த ரேஷன் கடை கட்டிடம் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. மேலும், கடையின் மேற்கூரை முற்றிலும் பழுதடைந்துள்ளது. இதனால், மழை பெய்யும்போது, மேற்கூரை வழியாக ரேஷன் கடைக்குள் மழைநீர் இறங்கி விடுகிறது. இதன் காரணமாக இங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி, பருப்பு, சீனி உள்ளிட்ட உணவு பொருட்கள் மழைநீரில் நனைந்து வீணாகி வருகிறது.