ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டி கிராமத்தில் கழிவுநீர் வாறுகால் வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆண்டிபட்டி அருகே உள்ள பிச்சம்பட்டி கிராமத்தில் உள்ள சின்னகாளியம்மன் கோயில் தெருவில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப்பகுதியில் கழிவுநீர் வாறுகால் வசதி இல்லாததால் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருக்களில் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் கழிவுநீர் வாறுகால் வசதி அமைத்து தரவேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்திடமும், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திடமும் மக்கள் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.