இ-சேவை மைய உரிமையாளர் வீட்டில் தீ விபத்து

ஈரோடு, டிச.9: ஈரோடு சூளை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த உதயகுமார் மகன் அருண்குமார் (36). இவர், சித்தோடு ராயர்பாளையத்தில் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். அருண்குமார், அவரது மனைவி உமாமகேஸ்வரி, இரு குழந்தைகள் மற்றும் தாய் உதயகுமாரி ஆகியோருடன் வசித்து வருகிறார். நேற்று காலை அருண்குமார், உமா மகேஸ்வரி ஆகியோர் வேலைக்கு சென்றனர். உதயகுமாரி, குழந்தைகளுடன் வெளியில் சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று காலை 11.15 மணியளவில் அருண்குமார் வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. அக்கம்பக்கத்தினர் வீட்டில் எட்டி பார்த்தபோது வீட்டினுள் தீ பிடித்து எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் வீட்டினுள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில், வீட்டில் இருந்த ஷோபா, டிவி, பிரிட்ஜ் போன்றவை தீயில் எரிந்து நாசமானது. யுபிஎஸ்.சில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: