ஜெயங்கொண்டம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

ஜெயங்கொண்டம், ஏப்.14: ஜெயங்கொண்டம் அடுத்த கடாரங்கொண்டான் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் உண்டியலை கடந்த பிப்ரவரி மாதம் மர்ம நபர்கள் உடைத்து பணத்தை திருடி சென்றனர். அதேபோல், கடந்த மாதம் வாரியங்காவல் கிராமத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்த விஜயகுமாரி(55) தாலி சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றார். இந்த இரண்டு சம்பவங்களையும் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், ஜெயங்கொண்டம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த நபரை போலீசார் மறித்து விசாரணை மேற்கொண்டதில், முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். தொடர்ந்து நடத்திய விசாரணையில், பொன்பரப்பி குடிகாடு கிராமத்தை சேர்ந்த தமிழ்பாரதி (20) என்பதும், மேற்கண்ட இரண்டு இடங்களில் திருடியதையும் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து தாலி சங்கிலி மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் சிறையில் அடைத்தனர்.

Related Stories: